செல்வராகவன் இயக்கத்தில் ஜெயராம், அனஸ்வரா ராஜன்!

By செய்திப்பிரிவு

ஜெயராம், அனஸ்வரா ராஜன் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல முக்கியமான படங்களை உருவாக்கியவர் கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ (2022) படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு நடிப்பில் இறங்கி, ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’, ‘ஃபர்ஹானா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். நடிகர் ரவிதேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில் உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதேபோல் தம்பி தனுஷ் இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் செல்வராகவன் மீண்டும் படம் இயக்குவது எப்போது என்ற கேள்வி இருந்துவந்தது.

அதற்கு விடை கிடைக்கும் விதமாக செல்வராகவன் தற்போது படம் ஒன்று இயக்குவது நடிகர் ஜெயராம் மூலமாக வெளிவந்துள்ளது. ஜெயராம் நடிப்பில் வரும் 11-ம் தேதி ரிலீசாக உள்ள மலையாள திரைப்படம் 'ஆப்ரகாம் ஒஸ்லர்'. இதன் புரோமோஷன் விழாவில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் தான் நடிப்பதை வெளிப்படுத்தினார் ஜெயராம்.

இந்தப் படத்தின் மற்ற தகவல்களை ஜெயராம் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவருடன் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பதை மட்டும் உறுதிசெய்துள்ளார். 'ஆப்ரகாம் ஒஸ்லர்' படத்தில் ஒன்றாக நடித்துள்ள ஜெயராம், அனஸ்வரா ராஜன் இருவரும் அதன் வெளியீடு குறித்து செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பில் பேசிக்கொண்டதை மட்டும் அந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார் ஜெயராம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE