படகும் பதற்றமும்... சிம்புதேவன் - யோகிபாபு காம்போவில் ‘போட்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ (BOAT) படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். அவரின் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படம் வரவேற்பை பெற்றது. கடைசியாக 2015-ம் ஆண்டு விஜய்யை வைத்து ‘புலி’ படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து ‘கசட தபற’, ‘விக்டிம்’ போன்ற ஆந்தாலஜி படங்களில் பங்காற்றியவர் முழுநீள சினிமாவை எடுக்கவில்லை.

கிட்டத்த 7 வருடங்களுக்குப் பிறகு சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியாக உள்ள புதிய படம் ‘போட்’. யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கௌரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

டீசர் எப்படி? - ‘இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்த சமயம். ஜப்பான் மெட்ராஸ் மாகாணத்தின் மீது குண்டுகளை வீசியது. உயிர்பிழைக்க 10 பேர் ஒரு படகில் ஏரி வங்காள விரிகுடாவில் ஒதுங்குகின்றனர்’ என கவுதம் வாசுதேவ் மேனனின் பின்னணி குரலில் படகில் செல்லும் கூட்டம் காட்டப்படுகிறது. தொடக்கத்திலேயே பாகவதர் பாடல் ஒலிக்க அதனை இடைமறித்து, “பாகவதர் கானா பாட்டெல்லாம் பாட மாட்டாரா?” என்ற யோகிபாபுவின் டைமிங் கவனிக்க வைக்கிறது.

டீசர் முழுவதும் ஒரு படகில் பயணிக்கும் 10 பேரைச் சுற்றியே நகர்கிறது. அதில் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்த படத்தின் கதை என யூகிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் படகு மூழ்கும் தருவாயில் இருக்கும்போது மூன்று பேர் கடலில் குதிக்கும் சூழல் ஏற்படுகிறது. தொடர்ந்து சுறா ஒன்று படகை சுற்றி வருகிறது. இப்படியான அடுத்தடுத்த நெருக்கடி காட்சிகளை அடுக்கி படத்தை இயக்குநர் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் என்பதை உணரமுடிகிறது. மேலும் ‘உயிர் பிழைக்கும் ஆசையில் எல்லோருக்குள்ளும் மிருகம் தலை தூக்குகிறது’ என்ற பின்னணி வசனம் மூலம் படம் எப்படியான களத்தை கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். ‘சிம்பு தேவன் இஸ் பேக்’ என சொல்ல முடியுமா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும். ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE