நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென நடிகர் மன்சூர் அலிகான் உணரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நடிகர் சங்கமும் மன்சூர்அலிகான் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸார் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர். தனது முழு வீடியோவையும் முழுமையாக பார்க்காமல் தனக்கு எதிராக நடிகர், நடிகைகள் கண்டன குரல்களை பதிவு செய்வதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியதால் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என த்ரிஷாவும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு: இந்நிலையில் தனது முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகக்கூறி நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி, எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? என மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர் குருதனஞ்செய்யிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், பொதுவாக திரைப்பட நடிகர்கள் பலரை இளைஞர்கள் தங்களின் ரோல்மாடலாக கருதி பின்பற்றும் நிலையில் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நடிகர் மன்சூர் அலிகான் உணர வேண்டும். அவர் தொடர்ச்சியாக இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறும் அவர் எதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காகவா? என கேள்வி எழுப்பினார். அதற்கு மன்சூர் அலிகான் தரப்பில், இந்த விவகாரத்தில் அவர் பேசிய முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், அதன்பிறகு நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரலாம் என்றும், தனக்கு எதிராக நடிகை த்ரிஷா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருப்பதை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

த்ரிஷா தரப்பு வாதம்: அப்போது நடிகை த்ரிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.பாபு, இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்ததாகவும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக இருக்கும்போது எதற்காக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை என்றும் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள இந்த மனுவுக்கு நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிச.22-க்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE