நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரன்ட்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த முனியசாமி, 2019-ல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் ரூ.15 கோடி கடன் கேட்டுள்ளார். கடன் பெற்றுத் தருவதற்காக ரூ.14 லட்சத்தை பவர் ஸ்டார் சீனிவாசன் வங்கிக் கணக்கில் செலுத்தினார் முனியசாமி.ஆனால், குறிப்பிட்டபடி, கடன் பெற்றுத் தராமல் சீனிவாசன் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, தான் கொடுத்த பணத்தை முனியசாமி திருப்பிக் கேட்டுள்ளார்.

2020-ம் ஆண்டில் நடிகர் பவர் ஸ்டார் ரூ.14 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளார். அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து, ராமநாதபுரம் நீதித் துறை நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தார் முனியசாமி. இந்தவழக்கில் சீனிவாசன் 4 முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதித்துறை நடுவர் நிலவேஸ்வரன் நேற்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE