யானை வளர்த்த வானம்பாடி: டார்ஜான் ஸ்டைல் சாகச கதை!

By செய்திப்பிரிவு

நீலா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தமிழ், மலையாளத்தில் பல படங்களைத் தயாரித்து இயக்கியவர் பி.சுப்பிரமணியம். சுவாமி அய்யப்பன், குமார சம்பவம், ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீமுருகன் உட்பட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இவர் திருவனந்தபுரத்தில் மெர்ரிலேண்ட் என்ற ஸ்டூடியோவை நடத்தி வந்தார். இவர் படங்கள் அனைத்தும் இங்குதான் உருவாக்கப்பட்டன. இவர் தயாரித்த முதல் கலர் படம், ‘யானை வளர்த்த வானம்பாடி’.

ஜெமினி ஸ்டூடியோ மாதிரி, இங்கும் சொந்தமான கதை இலாகாவை வைத்திருந்தார் சுப்பிரமணியம். அவர்கள்உருவாக்கிய கதை இது. திரைக்கதையை அப்போதைய மலையாள ஹீரோ திக்குரிசி சுகுமாரன் நாயர் அமைத்திருந்தார். தமிழ் வசனத்தை சோமசுந்தரம் எழுதினார். அந்த காலத்தில் பிரபலமாக அறியப்பட்ட லக்‌ஷ்மணன் இசை அமைத்தார். கு.மா.பாலசுப்பிரமணியன், கம்பதாசன், சுரபி மற்றும் சுந்தரகண்ணன் பாடல்கள் எழுதியிருந்தனர். படத்தில் ஏழு பாடல்கள். அனைத்தும் அப்போது ரசிகர்களைப் பாட வைத்தன.

மலையாளம், தமிழில் உருவான படம் இது. திக்குரிசி சுகுமாரன், ஸ்ரீராம், பகதூர், பிரெண்ட் ராமசாமி,எம்.என்.நம்பியார், மிஸ் குமாரி, எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.பாலசுப்பிரமணியம், கே.வி.சாந்தி உட்பட பலர் நடித்தனர். டார்ஜான் ஸ்டைல் கதைதான். ஆனால், அந்த காலத்திலேயே நம்பும்படியாக உருவாக்கி இருந்தார்கள். விபத்தில் சிக்கும் விமானத்தில் இருந்து ஒரேஒரு பெண் குழந்தை மட்டும் உயிர்பிழைக்கிறது. குரங்கு, யானை உள்ளிட்ட விலங்குகள் அதைக், காப்பாற்றி, அவற்றின் எஜமானர் தர்மராஜனிடம் கொண்டு செல்கின்றன. அவர் அதற்கு மல்லி என்று பெயரிட்டு வளர்க்கிறார். காட்டின் மகளாக அந்தப் பெண் வளர்கிறாள். அவள், உறவினர்களைச் சந்தித்தாளா? அவளுக்கு என்ன நடக்கிறது என்பது கதை.

மிஸ் குமாரி கதாநாயகியாக நடித்தார். அவருக்கு இரண்டு வேடம்.மலையாளத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர், பட்சிராஜா ஸ்டூடியோஸ் தயாரித்த ‘காஞ்சனா’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால், அதிக படங்களில் நடிக்கவில்லை.

ராம், துப்புறியும் நிபுணராகவும் எம்.என்.நம்பியார் காட்டுக் கொள்ளை யனாகவும் நடித்திருந்தனர். விமான விபத்தையும் அதன் உடைந்த பாகங்கள் காட்டுக்குள் சிதைந்து கிடைப்பதையும் அப்போதே நிஜ காட்சிபோல படமாக்கி இருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில், இந்தக் காட்சிகளும் யானை மற்றும் குரங்குகளின் சாகசங்களும் பேசப்பட்டன.

இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் தொடர்ச்சியாக, அடுத்த பாகமாக, ‘யானை வளர்த்த வானம்பாடி மகன்’ என்ற படம் 1971-ம் ஆண்டுவெளியானது. இதையும் பி.சுப்பிரமணியம் தயாரித்து இயக்கி இருந்தார் தமிழ், மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ, சி.எல்.ஆனந்தன், விஜயநிர்மலா உட்பட பலர் நடித்தனர். தமிழில் வெளியான முதல் இரண்டாம் பாக திரைப்படம் இதுதான் என்கிறார்கள்.

1959-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது ‘யானை வளர்த்த வானம்பாடி’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE