‘‘அப்பா வேற, நான் வேற” - நாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் சேதுபதி மகன் சூர்யா ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்‌ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா விஜய்சேதுபதி, “ஒருநாள் அப்பா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவருக்கு சாப்பாடு கொடுக்க போனேன். அப்போது அப்படி அனல் அரசு மாஸ்டர் கண்ணில் பட்டுவிட்டேன். அதன்பிறகு இந்தப் படம் அமைந்தது. எனக்கு சண்டைக் காட்சிகள் கொண்ட ஒரு நல்லப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.

அப்பா வேற, நான் வேற. அவருடைய பெயரை நான் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தக் கூடாது என நினைக்கிறேன். அதனால்தான், படத்தில் கூட சூர்யா என என் பெயரை மட்டும்தான் பயன்படுத்தச் சொன்னேன். இப்போது காலேஜில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து அப்பாவோடு சேர்ந்து நடிப்பேனா என்றுக் கேட்டால் அதைப் போக போக பார்த்துக் கொள்ளலாம். அப்பா மலேசியாவில் ஷூட்டிங்கில் உள்ளதால் இங்கு கலந்துகொள்ள முடியவில்லை. காலையில் எங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE