21 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் ரஜினி - கமல் சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் 21 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 170-வது படமான இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், பஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இதன் அருகிலேயே, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், ‘இந்தியன் 2’படப்பிடிப்பு அருகில் நடப்பதைஅறிந்த ரஜினிகாந்த், கமல்ஹாசனை சந்திப்பதற்காக அந்தபடப்பிடிப்பு தளத்துக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த கமல்ஹாசன், ‘என் நண்பரை சந்திக்க நானே வருகிறேன்’ என்று, ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு தளத்துக்கு நேற்று காலை சென்றார். இருவரும்கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதற்கு முன்பு ‘பாபா’, ‘பஞ்சதந்திரம்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு இதே இடத்தில் நடந்தபோது, இருவரும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில். சந்தித்துள்ளனர்.

லைகா நிறுவன தலைமை அதிகாரி ஜிகேஎம் தமிழ்க்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE