சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானின் 30 நிமிட வாக்குமூலம் வீடியோவாக பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக சென்னை ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் 30 நிமிடங்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திரைத் துறை மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

இதைத் தொடர்ந்து, பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக 354 (ஏ), 509 ஆகிய 2 சட்டப் பிரிவுகளின்கீழ் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நவ.23-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று சம்மனையும் வழங்கினர்.

சம்மனில் தெரிவிக்கப்பட்டபடி, ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் நேற்று காலை 10 மணிக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘உடல்நிலை பாதிப்பால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை’ என்று அவர் கடிதம் அனுப்பி இருந்தார். அவர் தலைமறைவானதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, ‘நான் எங்கும் தலைமறைவாகவில்லை’ என்று குரல் பதிவு செய்து ஆடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், பிற்பகல் 2.45 மணி அளவில் ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தனலட்சுமி முன்பு மன்சூர் அலிகான் ஆஜரானார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த 30 நிமிட வாக்குமூலம், வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. எழுத்து வடிவிலும் பதிவு செய்து, அவரிடம் கையொப்பம் பெறப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் கண்டனம்: முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்:

மன்சூர் அலிகானின் வழக்கறிஞர்: இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்.

நீதிபதி: எதற்காக தாக்கல் செய்தீர்கள். இப்போது எதற்காக திரும்ப பெறுகிறீர்கள்?

வழக்கறிஞர்: இந்த வழக்கில் எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்து மனு தாக்கல் செய்துவிட்டோம்.

நீதிபதி: தவறான காவல் நிலையத்தை வழக்கில் சேர்த்து மனு தாக்கல் செய்ய, நீதிமன்றம் ஒன்றும் விளையாட்டு மைதானம் அல்ல. இதுபோல நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது.

இவ்வாறு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதி அளித்தார். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE