“எஸ்.ஜே.சூர்யா இந்நாளின்‌ திரை உலக நடிகவேள்‌” - ரஜினிகாந்த் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஜிகர்தண்டா XX படம்‌ ஒரு குறிஞ்சி மலர்‌. கார்த்திக்‌ சுப்பராஜின்‌ அற்புதமான படைப்பு , வித்தியாசமான கதை மற்றும்‌ கதைக்களம்‌. சினிமா ரசிகர்கள்‌ இதுவரைக்கும்‌ பார்க்காத புதுமையான காட்சிகள்‌. ‘லாரன்ஸால’ இப்படியும்‌ நடிக்க முடியுமா என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின்‌ திரை உலக நடிகவேள்‌. வில்லதனம்‌, நகைச்சுவை, குணசித்திரம்‌ என மூன்றையும்‌ கலந்து அசத்தி இருக்கிறார்.

திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குநரின்‌ உழைப்பு பாராட்டிற்குரியது. ‘திலீப்‌ சுப்ராயனின்‌’ சண்டை காட்சிகள்‌ அபாரம்‌. ‘சந்தோஷ்‌ நாராயணன்‌’ வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில்‌ மன்னர்‌. இசையால்‌ இந்த படத்திற்கு உயிரூட்டி, தான்‌ ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர்‌ என்பதை இந்த படத்தில்‌ நிரூபித்து இருக்கிறார்‌.

இந்தப் படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்‌திருக்கும்‌ தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள்‌. படத்தில்‌ வரும்‌ பழங்குடிகள்‌ நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள்‌. நடிகர்களுடன்‌ போட்டி போட்டு கொண்டு யானைகளும்‌ நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும்‌ விதுவை எவ்வளவு பாராட்டினாலும்‌ தகும்‌, அற்புதம்‌. இந்தப் படத்தில் கார்த்திக் சுப்பராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். i am proud of you கார்த்திக் சுப்பராஜ். My hearty congratulations to கார்த்திக் சுப்பராஜ் and team” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE