சென்னையில் நடக்கிறது கமல் - மணிரத்னம் பட புரமோ ஷூட்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவ.7ம் தேதி வெளியாகிறது. இதற்கானப் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் படத்தின் புரமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நேற்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த வீடியோவும் நவ.7ம் தேதி வெளியாகிறது. ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னமும் கமலும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE