சென்னை: “அம்பானி, அதானி போன்ற பெயர்களை பயன்படுத்தக்கூடாது என சென்சார் அதிகாரிகள் கட்டுபாட்டு விதிக்கின்றனர். இதனை ஏற்க முடியாது” என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய ‘சரக்கு’ திரைப்படம் சென்சாருக்கு சென்றது. அதில் இதையெல்லாம் நீக்கச் சொன்னார்கள். நான் முடியாது என்றேன். உதாரணமாக, படத்தில் அம்பானி, அதானி பெயர்கள் வருகிறது. இருக்ககூடாது என்றனர். அதற்கு பதிலாக அம்மானி, அப்பானி என சொல்லவா என கேட்டேன். மேலும் ஏன் அம்பானி, அதானி பெயர்களை பயன்படுத்த கூடாது என கேட்டேன். அவர்கள் தனிப்பட்ட நபர்கள் என்றனர். அவர்கள் என் மீது வழக்கு தொடரட்டும் என கூறினேன். இது ஒரு கருத்து சுதந்திரம், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் வாச்சாத்தி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
அதில் இது ஒரு கற்பனை கதை எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல நாங்களும் செய்கிறோம் என்றோம். சென்சார் போர்டு அனுமதிக்கவில்லை. ‘காவாலா’ பாடலில் மோசமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். என்னுடைய படத்தில் ஆபாசம் எதுவுமில்லை. ஆனால் இதில் உள்ள ஒரு காட்சியை நீக்கச் சொல்கிறார்கள். ‘சிங்களவன்’, ‘கூடங்குளம்’ போன்ற வரிகளை நீக்கச் சொல்கிறார்கள். சினிமா என்பது கருத்து சுதந்திரம் தானே? மக்களை போய்ச் சேர வேண்டும் என்பதற்காக தானே படம் எடுக்கிறோம்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். டெல்லி என்ற ஊர் பெயரையே பயன்படுத்தகூடாது என்று பதறுகின்றனர். தணிக்கைத்துறை இப்படி கட்டுபாடு விதித்தால் எப்படி படம் எடுப்பது?. டாஸ்மாக் என்ற போர்டை காட்டக் கூடாது பெயரைச் சொல்ல கூடாது என்கின்றனர். சென்சார் போர்டு நடுநிலையாக இருந்து இந்த விதிகளை தளர்த்த வேண்டும்” என்றார்.