சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இதன் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. அண்மையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படம் பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. படத்தை லைகா தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.