விஜய்யின் ‘லியோ’ ட்ரெய்லர் கொண்டாட்டம்: திரையரங்கை கபளீகரம் செய்த ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய்யின் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கை கபளீகரம் செய்து, இருக்கைகளை சேதப்படுத்திச் சென்றனர்.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் எத்தனை மணிக்கு வெளியாகும் என்பதை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருந்தது. ட்ரெய்லரைக்காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். ட்ரெய்லர் 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்த பின்பு, கூட்டம் அதிகரித்தது.

மாலை ரோகிணி திரையரங்கில் லியோ டிரெய்லர் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், தியேட்டர் இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் தியேட்டர் முழுவதும் சேதமடைந்தது. முன்னதாக ஆர்வத்தைதை கட்டுபடுத்த முடியாத ரசிகர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு திரையரங்குக்குள் நுழைந்தனர்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE