திரைப்பட புரொமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ளாதது ஏன்? - விக்னேஷ் சிவன் பதில்

By செய்திப்பிரிவு

மலேசியா: “அவர் பெரும்பாலும் தனது சொந்தப் படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவதில்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார்” என்று நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.

திரைப் பிரபலங்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து ‘ 9skin’ என்ற அழகு சாதனப் பொருட்கள் விற்கும் நிறுவனம் மூலம் தொழில்முனைவோர் ஆகியுள்ளனர். இதற்கான அறிமுக விழா மலேசியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்கள் தங்களது பிராண்டை அறிமுகம் செய்தனர்.

தொடர்ந்து மேடையில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “நயன்தாராவை பொறுத்தவரை ஒரு விஷயம் சரியானது என தோன்றினால் மட்டுமே அதனை செய்ய முடிவெடுப்பார். அத்துடன் அதனை புரொமோட் செய்வார். அவர் பெரும்பாலும் தனது சொந்த படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவதில்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார்.

இப்போது நாங்கள் விற்கும் இந்தப் பொருட்கள் கூட அவர் பயன்படுத்தி பார்த்தவைதான். தொடக்கத்தில் இந்த அழகு சாதனப் பொருட்களுக்கு அவர் ஒரு பிராண்ட் அம்பாசிடராக இருப்பார் என நினைத்தேன். ஆனால், அவர் இதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதற்கான வடிவமைப்பு, எழுத்துரு முதற்கொண்டு அனைத்தையும் அவரே முழுமையாக கவனித்துக்கொண்டார். அது எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட அவர் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் கண்டு நான் வியந்திருக்கிறேன்” என்று விக்னேஷ் சிவன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE