‘மகாநதி’யை விட இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” - ‘சித்தா’வுக்கு கமல் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: “மகாநதி படத்தை விட எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” என ‘சித்தா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “நான் இந்தப் படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு என்னதான் அம்மா சொல்லிக் கொடுத்தாலும், அவர்களின் மனதில் பதியும்படி இருக்க வேண்டுமென்றால் கதை சொல்ல வேண்டும். எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால், இறுதியில் அழுத்தத்துடன் வெளியே வராமல், இப்படியெல்லாம் நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்லியிருகிறார்கள். பெண்குழந்தை, ஆண் குழந்தையெல்லாம் தாண்டி குழந்தைகளாகவே அவர்களை பார்க்க வேண்டும்.

இந்தப் படத்தில் இயக்குநருக்கு முக்கியமான பாராட்டு என்றால், விபத்தை விவரிக்கும்போதே மூளை எப்படி சிதறியது தெரியுமா என விவரிப்பார்கள். அப்படியெல்லாம் இல்லாமல், ஒரு கொலையை கேமராவை காட்டாமல் முதல் தகவல் அறிக்கையை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல திரைக்கதை ஆசிரியர்கள் ரசிகர்களின் மனதில் ஊன்றி நடக்க வேண்டும். ஊன்றிய இடத்தில் தடயம் பதியவேண்டும். அப்படி நிறைய தடங்கள் இருக்கிறது.

இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது பெரியவர்களுக்கான படம் மட்டுமல்ல. சிறுவர்களும் பார்க்க வேண்டும். படக்குழுவின் இன்ஸ்பிரேஷன் ‘மகாநதி’ என்றால் எனக்கு அதைவிட இது பிடித்திருக்கிறது. வசூல் ரீதியாக படம் வெற்றிபெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என பேசியுள்ளார். > சித்தா விமர்சனத்தை வாசிக்க: சித்தா Review: பதைபதைப்புக்கு பஞ்சமில்லா அடர்த்தியான படைப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE