லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இசை வெளியீடு நிகழ்ச்சி மலேசியாவில் நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில், நடிகர் விஜய் வெளிநாடுகளில் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் தான் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைப்பெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் தெரிவித்தார்.
தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. அதில், "பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எனினும் ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடிக்கடி அப்டேட் வெளியிடுவோம்.
பின் குறிப்பு: ஆடியோ வெளியீடு நடத்தாது பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல" இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.