“ட்வீட் போடுவது அட்மின்” - பயோவை மாற்றினாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

By செய்திப்பிரிவு

சென்னை: ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சையை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தளத்தில் தனது பயோவில் ‘ட்வீட் போடுவது அட்மின்’ என்று மாற்றியுள்ளதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று பரவி வருகிறது.

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் மன்னிப்புக் கோரியது. இதனை ரீட்வீட் செய்துள்ள ரஹ்மான், இந்த குளறுபடி குறித்து தனியே பதிவு எதுவும் போடவில்லை. மேலும் நிகழ்ச்சியை பாராட்டி சிலர் எழுதிய பதிவுகளை பகிர்ந்து வந்தார். இதனை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்ததையடுத்து, தனது பயோவில் ‘ட்வீட் போடுவது அட்மின்’ (Tweets by administrator) என்று ஏ.ஆர்.ரஹ்மான் மாற்றியுள்ளதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று பரவி வருகிறது. ஆனால் இதற்கு முன்பே அவர் தனது பயோவில் அதனை குறிப்பிட்டிருந்ததாகவும், தற்போது சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவலை பரப்பி வருவதாக ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE