“கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் கேளுங்கள்”: நடிகர் சங்க கட்டிட நிதி குறித்து செந்தில் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: கோடிகோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டித் தருமாறு கேட்கவேண்டும் என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிமுடிக்க நிதி திரட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தனர். இதற்காக நட்சத்திர கலைவிழாக்கள் நடத்த இருப்பதாகவும் கூறினர்.

நேற்றைய பொதுக்குழுவுக்குப் பிறகு நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ‘நடிகர்களிடமே நடிகர் சங்க கட்டிடத்துக்கான நிதியை வசூல் செய்யலாமே’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஊடகங்களாகிய நீங்கள்தான் அதை சொல்லவேண்டும். கோடிகோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் நீங்களே இந்த கேள்வியை கேளுங்கள்” என்று கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நேற்று (செப்,10 )சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் தலைமையில் நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஷால், கார்த்தி, ஸ்ரீமன், கோவை சரளா உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE