கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசர் செப்.11-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வரும் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் 'ஜிகர்தண்டா'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையிலும் பின்னர் சென்னையிலும் நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் டீசர் வரும் 11-ம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அதில் ‘More than a teaser’ என்ற வார்த்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE