நடிகர் மாரிமுத்து மறைவு - சில நினைவலைகள்

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.சினிமாவுக்காக சென்னை வந்த இவர்,இயக்குநர்கள் ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.பின்னர், 2008-ம் ஆண்டு வெளியான, ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில்பிரசன்னா, உதயதாரா, வடிவேலு நடித்தனர். இதில் வடிவேலுவின் ‘கெணத்த காணோம்’ காமெடி புகழ்பெற்றது.

இதையடுத்து 2014-ம் ஆண்டு மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘சப்பா குரிசு’படத்தைத் தமிழில் ‘புலிவால்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

பின்னர், ‘யுத்தம் செய்’ படத்தில்இயக்குநர் மிஷ்கின் அவரை குணசித்திர நடிகராக அறிமுகப்படுத்தினார்.இதையடுத்து ஜீவா, கொம்பன், உப்புக்கருவாடு, மருது, சண்டக்கோழி 2 உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் வில்லன் விநாயகனுடன் இணைந்து நடித்திருந்தார்.

இவர், சின்னத்திரையில் திருச்செல்வம் இயக்கும் ‘எதிர்நீச்சல்’ என்றதொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் அவர் நடிப்புப் பாராட்டப்பட்டது. அவர் மதுரை வழக்கில் பேசும் பேசும் ‘ஏம்மா ஏய்’ என்ற வசனம் எங்கும் பிரபலமானது. பெண்களிடமும் வரவேற்பை பெற்றது. சினிமாவில் கிடைக்காத பெயரும் புகழும்இந்தத் தொடரில் அவருக்குக் கிடைத்தது.

இந்தத் தொடருக்கான டப்பிங் பணியில் அவர் நேற்று காலை ஈடுபட்டிருந்தார்.அப்போது மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருந்தது. இதனால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அவரே காரை ஓட்டிச் சென்றார். அங்கு அவர் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரிமுத்துவின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்குநடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், இயக்குநர் வசந்த், மாரி செல்வராஜ், அருள்தாஸ், சென்ட்ராயன், முனீஷ்காந்த், ரமேஷ் கண்ணா, வையாபுரிஉட்பட ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று மாலை அவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. மறைந்த மாரிமுத்துவுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி, அகிலன் என்ற மகன், ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளனர்.

‘கெட்டது நடக்கப் போகுது’: ‘எதிர்நீச்சல்’ தொடருக்காக காரில்அமர்ந்தபடி அவர் பேசுவதுபோல ஒருகாட்சி வரும். அதில் அவர், ‘‘அடிக்கடி நெஞ்சு வலி அழுத்துது, இது உடம்புல இருந்து வர்ற வலியா, மனசுல வர்ற வலியான்னு தெரில. அப்பப்ப வலி வந்து ஏதோ எனக்கு எச்சரிக்கை பண்ணுதுன்னுதோணுது. ஏதோ கெட்டது நடக்கப் போகுதுன்னு தோணுதுப்பா எனக்கு. அதான்நெஞ்சுவலி மாதிரி வந்து எச்சரிக்கை பண்ணுது” என்று பேசியிருப்பார். அவர்பேசிய வசனம் நிஜமாகி விட்டதாகக் கூறிசமூக வலை தளங்களில் இந்த வீடியோவைரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தேனி மாவட்டத்தில் இருந்து சினிமாகனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து.ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர்.சின்னத்திரையிலும் நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன.

அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மாரிமுத்து மறைவு, திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திரை மற்றும் அரசியல் பிரபலங்கள்பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி: அண்ணன் மாரிமுத்து மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: மாரிமுத்து அருமையான மனிதர். அவர் இறப்புஅதிர்ச்சியளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த அஞ்சலி.

திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர்செல்வபெருந்தகை, தேசிய முற்போக்கு திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் விஜயகாந்த், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் சுசீந்திரன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE