பாலும் பழமும்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...

By செய்திப்பிரிவு

சிவாஜியின் நடிப்பு சிறப்பைச் சொல்லும் படங்களில் 'பாலும் பழமும்' படத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. ஏ.பீம்சிங் திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியம், பசுமணி இணைந்து கதை எழுதி இருந்தனர். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மனோரமா உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை சரவணா பிலிம்ஸ் தயாரித்தது.

புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார் மருத்துவர் ரவி (சிவாஜி கணேசன்). நர்ஸ் சாந்தியை (சரோஜாதேவி) காதலித்து திருமணம் செய்து கொள்வார். அப்போது சரோஜாதேவிக்கு டிபி நோய் இருப்பது தெரியவருகிறது. ஆராய்ச்சியை விட்டுவிட்டு முழு நேரமும் மனைவியைக் கவனிப்பதில் நேரத்தைச் செலவிட, இதனால் அவரிடம் சொல்லாமல் சென்றுவிடுவார் சாந்தி. அவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாகத் தகவல் வரும். இதையடுத்து தனது வளர்ப்புத் தந்தை பெரியவர் (எஸ்.வி சுப்பையா) மகள் சவுகார் ஜானகியைத் திருமணம் செய்வார். இப்போது டிபி நோய் சரியாகி சாந்தி திரும்ப வர, கண் பார்வை பறிபோனவராக இருப்பார் ரவி. நர்ஸாக அவரைக் கவனித்துக் கொள்ளும் சாந்திதான் தனது முதல் மனைவி என்று ரவிக்குத் தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். 'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்', ‘என்னை யார் என்று எண்ணி எண்ணி’, ‘காதல் சிறகை’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி’, ‘போனால் போகட்டும் போடா’ உட்பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின.

இந்தப் படத்தில் டிபி நோய் பாதித்தவராக, மெலிந்த தேகத்துடன் நடிப்பதற்கு, பட்டினியாக இருந்திருக்கிறார் சரோஜாதேவி. ‘அந்ததோற்றத்தில் என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறாய்’ என்று சிவாஜி அவரை பாராட்டியிருக்கிறார்.

இந்தப் படம் தமிழில் பல திரையரங்குகளில்100 நாள் ஓடியது. இதே படம் கன்னடத்தில் கல்யாண்குமார், சரோஜாதேவி நடிப்பில் பெரத்தஜீவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.இந்தியில் சாத்தி என்ற பெயரில் ரீமேக்கான இந்தப் படத்தில் ராஜேந்திரகுமாரும் வைஜயந்தி மாலாவும் நடித்திருந்தனர். இதை சி.வி.ஸ்ரீதர் இயக்கியிருந்தார். அங்கும் படம் வெற்றி பெற்றது.

1961-ம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘பாலும் பழமும்’ 63 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE