“ஆசுவாசப்படுத்துவதற்காக வெளியே வந்தார்” - மாரிமுத்துவின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த கமலேஷ்

By செய்திப்பிரிவு

சென்னை: “கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது” என மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதிநிமிடங்களை அவருடன் பணியாற்றிய கமலேஷ் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமலேஷ், “காலை 6.30 -8.30 டப்பிங் பணிகளுக்காக வந்திருக்கிறார். 1 மணிநேரம் டப்பிங் முடித்துவிட்டு கொஞ்சம் மூச்சுத்திணறலாக இருக்கிறது எனக் கூறி வெளியே வந்தார். நான் தான் அடுத்து டப்பிங் பேச வேண்டும். எங்கள் யாரிடமும் சொல்லாமல் கார் எடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

10 நிமிடம் மேல் ஆனது போன் செய்தோம் எடுக்கவில்லை. பின்னர் போன் செய்தபோது அவரது மகள் எடுத்தார். ‘சூர்யா ஹாஸ்பிடலில் இருக்கிறோம். அப்பா இறந்துவிட்டதாக சொல்கிறார்கள்’ என்றார். எங்களால் நம்பவே முடியவில்லை. 5 நிமிடத்தில் இப்படியான ஒரு செய்தி.

கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்திருச்சு. எங்கள் சீரியலுக்கு இது பேரிழப்பு. மிகப்பெரிய அடையாளம் பெற்றார். யாரும் எதிர்பார்க்காத செய்தி. ஷூட்டிங்கு கிளம்பிக்கொண்டிருந்தோம் இப்படி நடந்துவிட்டது. அர்பணிப்பான மனிதர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நாளை காலை அவரது சொந்த ஊரான தேனியில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE