திரை விமர்சனம்: பரம்பொருள்

By செய்திப்பிரிவு

அறுவைச் சிகிச்சைக்குக் காத்திருக்கும் தங்கையின் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது ஆதிக்கு (அமிதாஷ் பிரதான்). சின்ன சின்னத் திருட்டுகளைச் செய்யும் அவர், போலீஸ் அதிகாரி மைத்ரேயன் (சரத்குமார்) வீட்டில் கை வைக்க, மாட்டிக் கொள்கிறார். சிலை கடத்தல் குற்றவாளியிடம் வேலைப் பார்த்ததாகச் சொல்லும் ஆதியைப் பயன்படுத்தி, பெரிதாகச் சம்பாதிக்கத் திட்டம் போடுகிறார் மைத்ரேயன். வேறு வழியில்லாமல் உடன்படுகிறார் ஆதி. இருவரும் சிலை கடத்தல் குற்றவாளி வைத்திருந்த சிலைகளைக் கடத்தி விற்க முயல்கின்றனர். அவர்கள் திட்டம் நினைத்தபடி முடிந்ததா? தங்கையின் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் கிடைத்ததா என்பதை ட்விட்ஸ்டுடன் சொல்கிறது படம்.

‘போர்தொழில்’படத்துக்குப் பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார் சரத்குமார். ஆனால் இதில் கொஞ்சம் வேற மாதிரி. திரையரங்கில் அவர் ‘என்ட்ரி’க்கே அவ்வளவு கைதட்டல்.

பேராசைக் கொண்ட திமிர்பிடித்த அவர் கதாபாத்திரத்தையும் அப்பாவியான, தங்கையின் மருத்துவச் செலவுக்குத் தவிக்கும் நாயகன் அமிதாஷ் கதாபாத்திரத்தையும் தெளிவாகச் செதுக்கி இருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜ்.

அதற்குக் களமாக அவர் எடுத்துக்கொண்ட சட்டவிரோத சிலைக் கடத்தல் நெட்வொர்க் பின்னணியைத் தெளிவாகச் சொல்லும் திரைக்கதை படத்துக்குப் பலம். சிலை கடத்தல் பற்றிய கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் ஏற்கெனவே வந்திருந்தாலும் ‘பரம்பொருள்’ அதிலிருந்து தனித்துத் தெரிய அதுவே காரணமாகவும் ஆகிவிடுகிறது. ஆனால், முதல் பாதியில் படப்படப்பை ஏற்படுத்தும் கதை, கிளைமாக்ஸில் பழிவாங்கும் கதையாக மாறிவிடுவது கொஞ்சம் சறுக்கல். அதே நேரம் எதிலும் எச்சரிக்கையோடு செயல்படும் சரத்குமார் சாதாரணமாகப் பொட்டென்று மாட்டிக் கொள்வதையும் ஏற்க முடியவில்லை.

கொஞ்சம் வில்லத்தனம் கொண்ட கதாபாத்திரத்தில் சரத்குமார் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அமிதாஷ், எமோஷனல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். காஷ்மீரா ஷாவுக்கு அதிக வேலையில்லை.

பாலாஜி சக்திவேல், பவா செல்லதுரை, கஜராஜ், வில்லன்கள் பாலகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கி றார்கள். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாண்டிகுமாரின் ஒளிப்பதிவும் கதையோடு ஒன்ற வைக்கின்றன. நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம்.

சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை, படத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. யாருமற்ற சாலையில் நள்ளிரவில் ரோடுரோலர் வந்து சிலையை உடைப்பது, போலீஸ் அதிகாரியான சரத்குமார், மொத்த கதையிலும் சிலையை விற்கவே அலைவது போன்ற லாஜிக்கே இல்லாத சின்ன சின்ன விஷயங்கள் திரைக்கதையில் துறுத்திக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற குறைகள் இருந்தாலும் ‘பரம்பொருள்’ சிறந்த அனுபவத்தைத் தருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE