’சலார்’ தள்ளிவைப்பு எதிரொலி: ஒரே நாளில் 5 படங்கள் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டதால், வரும் 28ஆம் தேதி தமிழில் ஐந்து படங்கள் வெளியாகின்றன.

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இதில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது. இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால், படத்தை டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான தகவலை விநியோகஸ்தர்களுக்கு படக்குழு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ‘சலார்’ வெளியாகவிருந்த செப்டம்பர் 28ஆம் தேதியில் தமிழில் ஐந்து படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன. ஜெயம் ரவி - நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’, சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’, விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’, ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’, அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய ஐந்து படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.இந்த பட்டியலில் கடைசி நேரத்தில் மேலும் சில படங்கள் இணையக் கூடும் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இத்தனை படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE