‘ஜெயிலர்’ வெற்றிக்காக நெல்சனுக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜெயிலர்’ பட பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக இயக்குநர் நெல்சனுக்கு படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்துள்ளார். முன்னதாக நேற்று ரஜினிக்கு இதேபோல ஒரு செக்கை கலாநிதி மாறன் கொடுத்திருந்தார்.

‘ஜெயிலர்’ படத்தை பொறுத்தவரை அது இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே முக்கியமான படம். காரணம் ‘பீஸ்ட்’ படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்குப் பிறகு ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேபோல, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ படங்களின் பின்னடைவுக்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்திலிருந்தார் ரஜினி.

ஆக, பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்திய இந்தக் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர்’ விமர்சகர்களால் கலவையான கருத்துகளை பெற்றபோதிலும், ரசிகர்களால் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. உலக அளவில் ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ வசூலை முறியடித்து படம் முன்னேறி வருகிறது.

இந்நிலையில், இந்த பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக இயக்குநர் நெல்சனை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் செக் ஒன்றை கொடுத்துள்ளார். முன்னதாக நேற்று ரஜினிக்கு செக் கொடுத்திருந்த கலாநிதிமாறன் இன்று அவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE