சென்னை: ‘ஜெயிலர்’ பட பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தை பொறுத்தவரை அது இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே முக்கியமான படம். காரணம் ‘பீஸ்ட்’ படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்குப் பிறகு ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேபோல, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ படங்களின் பின்னடைவுக்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்திலிருந்தார் ரஜினி.
ஆக, பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்திய இந்தக் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர்’ விமர்சகர்களால் கலவையான கருத்துகளை பெற்றபோதிலும், ரசிகர்களால் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. உலக அளவில் ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ வசூலை முறியடித்து படம் முன்னேறி வருகிறது.
இந்நிலையில், இந்த பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினிகாந்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேரில் சந்தித்து செக் ஒன்றை கொடுத்துள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஜெயிலரின் வெற்றியை கொண்டாடுவதாக குறிப்பிட்டுள்ளது.
» பாக்ஸ் ஆஃபிஸில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’வுக்கு பின்னடைவு
» ‘கொடி’ படத்துக்குப் பிறகு அரசியல் பிரமுகர் கதாபாத்திரத்தில் தனுஷ்?