‘ஜவான்’ உருவாக காரணமே விஜய்தான்: இயக்குநர் அட்லீ தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜவான்’ திரைப்படம் உருவாக காரணமே நடிகர் விஜய் தான் என்று படத்தின் இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் அட்லீ “எல்லோருக்கும் வணக்கம் நண்பா. ‘ஜவான்’ படம் உருவாக காரணமே என்னோட அண்ணன் விஜய் தான். இந்தப் படத்துக்காக அவர் என்னை நிறையவே ஊக்கப்படுத்தினார். எது நடந்தாலும் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

நிறைய நெகட்டிவிட்டி வரும். விஜய் சொல்வதை போல, ‘இக்னோர் நெகட்டிவிடி நண்பா’. நம்ம 6 மாசத்துல ஒரு படம் பண்ணி, 7ஆவது மாசம் படத்த ரிலீஸ் பண்ணி ஜாலியா வாழ்ந்துட்டு இருந்தோம். ஆனா ‘ஜவான்’ வாய்ப்பு வந்தது. அதனுடன் சேர்ந்து கரோனாவும் வந்தது. இதனால் படம் முடிக்க நினைத்ததை விட அதிக நாட்கள் தேவைப்பட்டது. இருந்தாலும் நான் விஜய் ரசிகன் என்பதால் என்றைக்குமே கொடுத்த வாக்கை மீறியது கிடையாது. படம் சிறப்பாக வந்துள்ளது.

ஷாருக்கானிடம் ஜவான் பட பாடலை காட்ட வேண்டும். உடனடியாக முடித்துகொடுங்கள் என அனிருத்திடம் சொன்னேன். உடனே அவர், ‘இன்னா தல இப்போவே பண்ணி கொடுத்துட்றேன்’ என உடனடியாக முடித்துக் கொடுத்தார். இசை உலகில் தவிர்க்க முடியாத நபர் அனிருத்.

கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது நயன்தாரா தான் நினைவுக்கு வந்தார். தற்போது அவர் கேரளாவில் இருப்பதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. நான் வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்த எப்போதும் பாடுபடுவேன்” என்றார். வாசிக்க > வீடியோ காலில் வாழ்த்திய கமல், அனிருத்துக்கு முத்தம்... - ஷாருக்கானின் ‘ஜவான்’ நிகழ்வின் ஹைலைட்ஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE