இனி எந்த தேர்தலிலும் யாருக்கும் ரஜினி ஆதரவு தரமாட்டார்: அண்ணன் சத்தியநாராயணா

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, இனி எந்த தேர்தலிலும் யாருக்கும் ரஜினி ஆதரவு தர மாட்டார் என்று அவரது அண்ணன் சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரான விழுப்புரத்தில் அவரது பெற்றோரை இன்று சந்தித்த ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “உலகமே போற்றும் சாதனையைச் செய்த வீரமுத்துவேலின் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்தின் அனுமதியுடன் இங்கு வந்துள்ளேன். வீரமூத்துவேலுவும், அவரை இந்த உலகுக்குத் தந்த அவரது பெற்றோரும் நீண்டு ஆயுளுடன் வாழவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

‘ஜெயிலர்’ படத்தை மக்கள் அனைவரும் சென்று ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து ‘லால் சலாம்’ வருகிறது. அதற்கு அடுத்த படம் குறித்து ரஜினி பிறகு அறிவிப்பார். யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுவது ஆரம்பத்திலிருந்து ரஜினியின் பழக்கம். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் யாருக்கும் ரஜினி ஆதரவு தர மாட்டார்.” இவ்வாறு சத்திய நாராயணராவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE