“என்ஐஏ எனக்கு சம்மன் அனுப்பவில்லை” - வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

“தேசிய புலனாய்வு முகமை எனக்கு எந்த சம்மனும் அனுப்பவில்லை. ஊடகங்கள் உண்மை தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடக்கும் சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன். ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வரும் செய்திகள் பொய்யானவை. உண்மைதன்மையற்றவை. அப்படியான எந்த சம்மனும் எனக்கு அனுப்பப்படவில்லை. நேரில் ஆஜராக வேண்டும் என்ற எந்த கோரிக்கையும் வரவில்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரிலான்ஸ் மேலாளராக ஆதிலிங்கம் என்னிடம் பணியாற்றினார். இந்தக்காலக்கட்டத்தில் நான் மேலும் பல ப்ரீலான்ஸர்களுடன் ஒரேநேரத்தில் பணியாற்றினேன். பணியில் இருந்து அவர் சென்ற பின்பு இன்றுவரை அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் நான் வைத்துகொள்ளவில்லை. நான் செய்திகளை பார்க்கும்போது அதிர்ச்சியடைந்தேன். எவ்வாறாயினும் அரசுக்கு உதவுவதில் எனக்கு சந்தோஷம் தான்.

இன்றைய காலக்கட்டத்தில் சம்பந்தபட்ட நபர்களிடமிருந்து உண்மையையோ, விளக்கத்தையோ பெறாமல் செய்தியாக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலான ஊகங்களை வெளியிடுவதற்கு பதிலாக உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளை வெளியிட ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE