சென்னை: ‘தனி ஒருவன்-2’ திரைப்படம் குறித்த அறிவிப்பை 2.54 நிமிட வீடியோ மூலம் அறிவித்துள்ளது படக்குழு. இந்த வீடியோ கதை அமைப்பு குறித்து விவரிக்கிறது. அதில் மித்ரன் அடுத்த எதிரியை எதிர்கொள்ள தயார் என சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 2015-ல் வெளியான திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இன்றோடு (ஆக. 28) இந்தப் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ‘தனி ஒருவன்-2’ குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
வழக்கமான போலீஸ் கதையில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த தனி ஒருவன் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஹீரோ மற்றும் வில்லன் என இருவருக்கும் சரி சமமான அளவில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று ‘தனி ஒருவன்-2’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024-ல் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.