‘புஷ்பா’வுக்கும் ‘ரெட் சாண்டல் வுட்’ படத்துக்கும் தொடர்பில்லை: இயக்குநர் குரு ராமானுஜம் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: ஜேஎன் சினிமாஸ் சார்பில் ஜே.பார்த்தசாரதி தயாரித்துள்ள படம், ‘ரெட் சாண்டல் வுட்’. வெற்றி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். ‘கேஜிஎஃப்’ ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம் உட்பட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள குரு ராமானுஜம் கூறியதாவது:

2015-ல் செம்மரம் வெட்ட போனதாகச் சொல்லி திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் கதைப்படி, நாயகன் வெற்றி, கதாநாயகியின் அண்ணனைத் தேடி ரேணிகுண்டா செல்கிறார். செம்மரம் கடத்த வந்திருப்பதாகச் சொல்லி வனத்துறையால் அவர் கைது செய்யப்படுகிறார். அவருடன் மேலும் சில தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். அது தெரிய வராதபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களை என்கவுன்ட்டர் செய்ய சொன்னது யார்? சாதாரண சிறைத் தண்டனை கொடுக்கக்கூடிய குற்றத்துக்கு இந்தக் கொடூர தண்டனை ஏன்? என்பது கதை. இதற்கும் ‘புஷ்பா’ படத்துக்கும் தொடர்பில்லை. செப்.8 ம் தேதி படம் வெளியாகிறது. இவ்வாறு குரு ராமானுஜம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE