ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய லைகா நிறுவனம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு லைகா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது..

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன், நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE