தமிழ் சினிமாவை ‘ஏமாற்றிய’ தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு விரைவுப் பார்வை

By செய்திப்பிரிவு

69-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழ் சினிமா இடம்பெற்றிருப்பது ஏமாற்றம் அளிக்கும்படியாக உள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலக்கடத்தில் சென்சார் செய்யப்பட்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறப்பு விருதுக்கான பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாநில மொழிப் பிரிவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதுக்கு ‘கடைசி விவசாயி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டை பொறுத்தவரை சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் என 5 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருந்தது. ‘சிவரஞ்சனியும், சில பெண்களும்’ திரைப்படம் 3 பிரிவுகளில் விருதை வென்றிருந்தது. மண்டேலா 2 பிரிவுகளில் விருது வென்றது. மொத்தம் கடந்த ஆண்டு மட்டும் 10 விருதுகள் கிடைத்திருந்தன.

2021-ல் கவனிக்கத்தக்க நல்ல படைப்புகள் தமிழில் வந்தபோதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேசிய விருது கிடைத்திருப்பது தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை’, சூர்யாவின் ‘ஜெய்பீம்’, மாரிசெல்வராஜின் ‘கர்ணன்’ உள்ளிட்ட நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் படங்கள் தேசிய விருதுகளை வாங்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு பெரும் ஏமாற்றமே. | வாசிக்க > தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்: சிறந்த படம் ‘ராக்கெட்ரி’, சிறந்த தமிழ்ப் படம் ‘கடைசி விவசாயி’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE