2 தேசிய விருதுகளை வென்ற மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’

By செய்திப்பிரிவு

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இரண்டுமே மிகவும் முக்கியமான பிரிவுகள் என்பது கவனிக்கத்தக்கது.

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. படத்தில் விவசாயியாக நடித்த நடிகர் நல்லாண்டி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்திருந்தனர். அழுத்தமான திரைக்கதையால் விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்ட 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் ‘கடைசி விவசாயி’ இரண்டு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதையும் ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது. பார்க்க > முழு பட்டியல்

‘கடைசி விவசாயி சிறப்பு என்ன?’ - சலனமின்றி தவழ்ந்தோடும் ஆழ்நதியின் பெரும் பயணத்தை அதன் கரையோர பசும் பரப்பில் அமர்ந்து மெய்சிலிர்த்து ரசிப்பதற்கு நிகரான அனுபவத்தை 'கடைசி விவசாயி' நமக்கு அளிக்கிறது; ஒருவித தியான நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இதன் ஆக்கமும், அது பேசும் விழுமியங்களும் நம்முள் உருவாக்கும் நேர்மறை உணர்வுகள், படம் முடிந்த பின்னரும் நிலைத்து நிற்கின்றன. முழுமையாக வாசிக்க > கடைசி விவசாயி - தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த படைப்பு. ஏன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE