“என்னை வைத்து படம் எடுக்க பலரும் யோசித்தார்கள்” - நடிகர் விமல் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “இவரை வைத்து படம் எடுக்கலாமா என்று பலரும் யோசிக்கும் அளவுக்கு கடந்த மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. அந்த சமயத்தில் என்னை நம்பி வந்த படம்தான் இந்த ‘துடிக்கும் கரங்கள்” என நடிகர் விமல் பேசியுள்ளார்.

வேலூர்தாஸ் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் விமல் பேசுகையில், “பலரும் ஏன் உங்கள் படம் அடிக்கடி வருவதில்லை என்று கேட்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். இனி அடுத்தடுத்து எனது படங்கள் வெளியாகும். இப்போதெல்லாம் நிறைய கையெழுத்துக்கள் போடுவதில்லை. அதனால் இனிமேல் எனக்கு படங்கள் நிறைய வரும். சினிமாவுக்கு வந்த புதிதில் நம்ம படம் தானே என நீட்டிய இடத்தில் எல்லாம் நம்பி கையெழுத்து போட்டு விட்டேன். ஆனால் அதற்கெல்லாம் பின்னாடி மொத்தமாக சேர்த்து வைத்து கிடைத்தது. இதை தற்போது புரிந்துகொண்டேன்.

விமல் படங்களே வரவில்லையே, இவரை வைத்து படம் எடுக்கலாமா என்று பலரும் யோசிக்கும் அளவுக்கு கடந்த மூன்று வருடங்கள் ஓடி விட்டன. அந்த சமயத்தில் என்னை நம்பி வந்த படம் தான் இந்த ‘துடிக்கும் கரங்கள்’. சொல்லப்போனால் லாக்டவுன் சமயத்தில் எனக்கு கைகொடுத்த படமும் கூட. இந்த படத்தில் நடிக்கிறேன் என்கிற தகவல் பரவியதால் தான் எனக்கு ‘விலங்கு’ உள்ளிட்ட இன்னும் சில பட வாய்ப்புகள் தேடி வந்தன. என் தரப்பில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் யாரையும் அழைக்கவில்லை. கூப்பிட்டு வரவில்லை என்றால் சங்கடமாகிவிடும். அதற்கும் ஒரு நேரம் வரும். அப்போது பார்த்துகொள்ளலாம்.

ரோபோ சங்கரை அவரை பார்த்து பல பேர் திருந்திவிட்டார்கள். பலரும் உடல்நலத்தில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நானும் மது அருந்தி கடந்த 45 நாட்களாகிவிட்டது. திருந்தி விட்டேன்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE