மாமன்னன் | “மீம்களையும், எடிட் வீடியோக்களையும் ரசித்தேன்” - ரவீனா ரவி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: “கடந்த 3 நாட்களாக இணையத்தில் உலா வந்த மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன்” என ‘மாமன்னன்’ படத்தில் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த ரவீனா ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் கதாபாத்திரத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கனவில் கூட நினைக்கவில்லை. ஜோதி எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவளாக இருப்பாள். மாரி செல்வராஜ், ஃபஹத் ஃபாசிலுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “கடந்த 3 நாட்களாக இணையத்தில் உலா வந்த மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன். வசனமில்லாமல், திரையில் குறைவான நேரம் தோன்றியபோதிலும் அது ஒரு பிரச்சினையில்லை என்பதை நம்பினேன். உங்களின் அன்பு என்னுடைய நம்பிக்கை சரி என்பதை நிரூபித்துள்ளது. நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்னன்’. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு மனைவியாக ரவீனா ரவி நடித்திருந்தார். பின்னணி குரல் கலைஞரான ரவீனா ரவிக்கு படத்தில் வசனமே இருக்காது. இருந்த போதிலும் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு நடிப்பில் நியாயம் சேர்த்திருந்தார். படத்தில் இவருடைய போர்ஷன் வீடியோக்கள் கட் செய்யப்பட்டு, பின்னணியில் ‘எந்நாளும் நீ தான்டி’ இளையராஜா பாடல் இணைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியிருந்த நிலையில், தற்போது அதற்கு ரவீனா ரவி நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வைரல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE