விரைவில் ‘பீட்சா 4’ - தயாரிப்பாளர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘பீட்சா’ பட வரிசையின் மூன்று பாகங்களைத் தொடர்ந்து, அதன் நான்காவது பாகமும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி. வி.குமார் தயாரித்துள்ள படம், ‘பிட்ஸா 3- தி மம்மி’. மோகன் கோவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஸ்வின், பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், கவிதா பாரதி, குரேஷி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண்ராஜ் இசை அமைத்துள்ள இப்படம் கடந்த ஜூலை 28 திரையரங்குகளில் வெளியானது.

11 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘பீட்சா’ படம் தந்த தரமான ஹாரர் திரை அனுபவம், அதன் 2-ம் பாகத்தில் ஏமாற்றம் அளித்திருந்த நிலையில், ‘பிட்ஸா 3 தி மம்மி’ முதல் படம் தந்த கவுரவத்தை மீட்டுக்கொண்டிருக்கிறது. வாசிக்க > திரை விமர்சனம்: பிட்ஸா 3

இந்த நிலையில், 'பீட்சா' திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: “பீட்சா மூன்று பாகங்களின் வெற்றி அப்படங்களின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. எனவே, அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 'பீட்சா' நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று சி.வி.குமார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE