மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் புதிய படப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.50 கோடி வசூலை குவித்தது. இந்தப் படத்தை முடிந்த கையுடன் கலையரசன், நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சிறுவர்களை மையப்படுத்திய படமான ‘வாழை’ படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார் மாரி செல்வராஜ்.

அடுத்ததாக அவர் துருவ் விக்ரமுடன் இணைகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தூத்துக்குடியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படம் கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த இவர், வறுமை பின்னணியில் இருந்தபோதிலும் ஆசிய அளவிலான கபடி வீரராக உயர்ந்துள்ளார். அர்ஜூனா விருதைப் பெற்றுள்ள அவரது வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் 1990 காலக்கட்ட பின்னணியில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE