சென்னை: வெங்கட் பிரபு தயாரிக்கும் புதிய படத்துக்கு ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, தற்போது விஜய் 68 படத்துக்கான கதை தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ‘லியோ’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இப்படத்துக்கான பணிகள் தொடங்க உள்ளனர.
நேற்று (ஜூலை 29) வெங்கட் பிரபுவின் போஸ்டரோடு புதிய அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலானது. ‘விஜய் 68’ குறித்த அப்டேட்டைத்தான் படக்குழு வெளியிடப் போகிறது என விஜய் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று வெங்கட் பிரபு தயாரிக்கவுள்ள புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ‘மீசையை முறுக்கு’, ‘மாணவன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகர் ஆனந்த் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்துக்கு ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் பவானிஸ்ரீ, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.எச்.காசிஃப் என்பவர் இசையமைக்கிறார்.