நடிகர் பவன் கல்யாணுக்கு நாசர் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்த் திரையுலகில் தமிழ் நடிகர்களையும் தொழிலாளர் களையும்மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பெஃப்சி அமைப்பு சமீபத்தில் புதிய விதியை அறிவித்திருந்தது. இதுபற்றி ‘ப்ரோ’படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ‘தமிழ்த் திரையுலகம் குறுகிய மனப்பான்மையில் இருந்துவெளிவரவேண்டும்’ எனக் கூறியிருந்தார். அவர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தென்னிந்திய நடிகர்சங்கத் தலைவர் நாசர் விளக்கம்அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள், தமிழ்த் திரையுலகில் பணிபுரியஅனுமதிக்கப்பட மாட்டார்கள் எனஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தி. தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கானத் தேவை இருக்கிறது. அதனால் இந்தச் சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்

தமிழ்த் திரையுலகில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழ்ப் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியஸான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர, கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களைப் பற்றியது அல்ல.

எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணிஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்பும் மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ்த் திரையுலகம் மிக நீண்டபாரம்பரியம் கொண்டது. அன்பான சகோதரர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் இந்தச் செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம். உலக அளவில் அதைக் கொண்டு செல்வோம்.

இவ்வாறு நாசர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE