“மம்மூட்டியின் எளிமையும், பாசமும் நெகிழச் செய்கிறது” - ஐஸ்வர்யா மேனன் சிலாகிப்பு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: “மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்ற வாழ்நாள் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று உற்சாகத்தில் துள்ளுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

நடிகர் நிகில் சித்தார்த்தா, நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘ஸ்பை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், தெலுங்கில் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இந்தநிலையில், நடிகர் மம்முட்டி படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது காம்பினேஷனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இதுகுறித்துப் பேசிய அவர், “நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன். தற்போது அந்தக் கனவு ‘பஸூகா’ படத்தின் மூலம் நனவாகி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படத்தின் இளம் நாயகனுக்கு ஜோடியாக மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இப்படத்தை இயக்குகிறார்.

கேரள அரசின் மாநில விருதுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற மனிதர். ஆனால் படப்பிடிப்பில் மிக எளிமையாக பாசமாக, அவர் பழகும் விதம் நெகிழச் செய்கிறது.அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இப்படம் கமிட் ஆன பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE