சென்னை: “நயன்தாரா எந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகணும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் நடிகர் விஷால் கூறியது: அரசியல் என்பது சமூக சேவை. மக்களுக்கு தேவையானதை செய்வது தான் அரசியல். அதை பிஸினஸாக பார்க்க கூடாது. அந்த வகையில் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். ஆக நான் இனிமேலும் அரசியலுக்கு வரவேண்டுமென்பதில்லை. அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறி நடிக்கும்போது, ஒரு நடிகர் அரசியல்வாதியாவதில் எந்த தவறுமில்லை.
இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சமகால இளைஞர்கள் போதைப்பொருட்களை தவிர்க்க வேண்டும். அதேபோல சமூக வலைதளங்களை பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. 4-5 மணி நேரம் என பார்ப்பதால் எந்தப் பயனுமில்லை. தேவையான நேரத்தில் பயன்படுத்துவது தான் சரி” என்றார்.
மணிப்பூர் கொடூரம் பற்றி பேசுகையில், “அரசுதான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் சாதி ரீதியாக ஓட்டு போய்விடும் என்று நினைக்காத ஒரு முதல்வர் இருந்தால்தான் அதைத் தடுக்க முடியும்” என்றார்.
நடிகர், நடிகைகள் பட ப்ரமோஷன் விழாவில் கலந்துகொள்வது குறித்து பேசுகையில், “நயன்தாரா எந்த பட புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகணும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. நான் பள்ளித் தலைமை ஆசிரியர் கிடையாது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் தான். எனக்கு இஷ்டமில்லை என சொல்லுபோது நாம் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால், வந்தால் நல்லாயிருக்கும் படத்தின் புரொமோஷன்களில் நடிகர்கள் பங்கேற்பது தப்பே இல்லை. காரணம், தயாரிப்பாளர் ஒரு நடிகருக்கு தேவையான ஊதியத்தை கொடுத்திருக்கிறார். அப்போது தான் அவரது படம் ரசிகர்களிடையே சென்று சேரும் என்பதால் அழைக்கிறார். அப்படி புரொமோஷன்களில் கலந்துகொள்வது தப்பே கிடையாது. ஏசி ஹாலில்தான் நிகழ்ச்சி நடக்கிறது” என்றார்.