சென்னை: 'தில்லுக்கு துட்டு’ மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் முழுக்க முழுக்க தன் படமாக இருக்கும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சந்தானம் பேசியது: “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தை முழுக்க முழுக்க சந்தானம் படமாக உருவாக்கி உள்ளோம். 'தில்லுக்கு துட்டு' முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. அதேபோல இந்தப் படமும் மக்களின் மனங்களை கவரும் என்று நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேய் கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தை பிரேம் ஆனந்த் உருவாக்கியுள்ளார்” என்று சந்தானம் பேசினார்.
அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ‘லொள்ளு சபா’ ராம்பாலா இயக்கிய ‘தில்லுக்கு துட்டு’ படவரிசையில் மூன்றாம் பாகமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் சுரபி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆஃப்ரோ இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 28 திரையரங்குகளில் வெளியாகிறது.