“படப்பிடிப்பு தளங்களில் உரிய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்” - ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: “படப்பிடிப்பு தளங்களில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்து தர வேண்டும்” என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு படம் தொடங்கும்போதே பட்ஜெட்டில் ஆரம்பிக்கிறார்கள், எத்தனை நாட்களுக்குள் முடிக்கிறார்கள் என்ற தெளிவில்லாமல் இருப்பதால் தொழிலாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. முறையாக ஊதியம் கொடுக்காததால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு இந்தப்படம் எத்தனை கோடிக்குள் முடிக்கப்போகிறோம் என்பது இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தெளிவாக தெரியவேண்டும்.

அதை திட்டமிட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் வராது. இயக்குநர் தான் சொல்லும் தேதிக்குள் படத்தை முடிக்கவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதன்படி தொழிலாளர்களுக்கு ஊதியத்தை கொடுக்க வேண்டும். இந்த வருடம் படப்பிடிப்பு தளங்களில் விபத்தில் 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த உயிரை திரும்ப கொடுக்க முடியாது. அந்த விபத்து நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இதனை நாங்கள் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறோம். சுதந்திர தினத்துக்குள்ளாவது எங்களுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும். இதனை ஒழுங்குபடுத்தி தர தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்தோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE