சென்னை: சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 41 நாள் பயணத்துக்கு பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவை சந்திரயான்-3 சென்றடைகிறது.
இதனையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வாயுவில் சாடி ஒரு வானவெளிப் பயணம். நிலவை நோக்கி நீள்கிறது மனித எத்தனம். வெற்றிகரமாக விண்ணில் யாத்திரை தொடங்கியிருக்கிறது சந்திரயான் 3. இஸ்ரோவின் விடாமுயற்சிக்கும் விஞ்ஞானத்தின் வெற்றிக்கும் மனமார்ந்த வாழ்த்து. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.