சென்னை: “மாவீரன் படத்துக்கு சென்னை கே.பி. பார்க் பிரச்சினையை ரெஃபரன்ஸாக பயன்படுத்திக்கொண்டேன்” என இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்தியேன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், படம் குறித்து பேசிய இயக்குநர் மடோன் அஸ்வின், “படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்தை திரையரங்குகளில் பார்க்கிறேன். ‘மண்டேலா’ படத்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தப் படத்தை சில நிகழ்வுகளை மையப்படுத்திதான் எடுத்துள்ளோம். யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தோம். அரசியல் ரீதியாக இதுதான் கருத்து என எங்கேயும் திணித்து கூறவில்லை. சென்னை கே.பி. பார்க் ஹவுஸிங் போர்டு பிரச்சினையை ரெஃபரன்ஸாக வைத்துக்கொண்டேன். யாரையும் குறிப்பிட்டு படமெடுக்கவில்லை.
உதயநிதி படம் பார்த்துவிட்டு இரண்டு தம்ப்ஸ் அப் கொடுத்திருந்தார். அது மகிழ்ச்சியாக இருந்தது. இது சூப்பர் ஹீரோ படமில்லை. இது ஒரு ஃபேனடஸி படம்தான். விஜய் சேதுபதி டப்பிங்கில் படம் பார்க்கும்போதே ரசித்து பார்த்தார்” என்றார்.
மேலும், “ஒவ்வொருக்குள்ளேயும் ஒரு குரல் கேட்கும். நம்மை சுற்றி நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க வேண்டும் என நமக்குள் ஒலிக்கும் குரல் வெளியே வரவேண்டும் என்ற ஐடியாவாகத்தான் இதனை உருவாக்கினேன்” என்றார். | வாசிக்க > மாவீரன் - விமர்சனம்: அதகளமும் அக்கறையும் நிறைந்த களத்தில் நிகழ்த்தப்பட்டதா பாய்ச்சல்?