சோகமும் வலியும்... - சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட ‘வா... வீரா’ சிங்கிள் எப்படி?

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘வா... வீரா’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு 'மண்டேலா' படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இரண்டாவது சிங்கிள் பாடலான ‘வண்ணாரபேட்டையில’ பாடலை அதிதியும், சிவகார்த்திகேயனும் இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில், தற்போது படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘வா... வீரா’ பாடல் வெளியாகியுள்ளது.

பாடல் எப்படி? - இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் பரத் ஷங்கரே பாடியுள்ளார். அவருடன் வைக்கம் விஜயலட்சுமியும் சிறிய பகுதிக்கு குரல் கொடுத்துள்ளார். யுகபாரதியின் ‘இந்த பூமியில சாமிக்கெல்லாம் நான் கத்தி சொன்னாலும் கேக்குமா’, ‘இருள பாக்காம வெளிச்சம் தெரியாதா?’, ‘வலிய தாங்காம வாழ்க்க புரியாதா’ வரிகள் ஈர்க்கின்றன.

சோகமும் வலியுமாக உருவாகியுள்ள இப்பாடல் இறுதியில் உத்வேகத்தையும் கொடுக்கிறது. மெலடியாக செல்லும் மொத்தப் பாடலிலும் வைக்கம் விஜயலட்சுமியின் குரல் தனித்து தெரிகிறது. ‘மணியே மணிக்குயிலே..’. என்ற வார்த்தையை வெவ்வேறு மாடுலெஷன்களில் அவர் பாடியிருப்பது ரசிக்க வைக்கிறது. படம் ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வா வீரா பாடல் வீடியோ;

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE