‘பார்ட்னர்’ படத்தில் காமெடி கதாபாத்திரம்: ஹன்சிகா

By செய்திப்பிரிவு

சென்னை: மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம், 'பார்ட்னர்'. பாலக் லால்வாணி, யோகி பாபு, பாண்டியராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூரியபிரகாஷ் தயாரித்துள்ளார்.

விஞ்ஞானியான பாண்டியராஜனின் ஆய்வுக் கூடத்துக்கு திருடச் செல்கிறார்கள், ஆதியும் யோகிபாபுவும். அப்போது ஏற்படும் பிரச்சினையில் யோகிபாபு ஹன்சிகாவாக மாறுவதுதான் கதை. இதை காமெடியாக சொல்லும் படம் இது.

இந்தப்படம் பற்றி ஹன்சிகா கூறியதாவது:

‘பார்ட்னர்’ படத்தின் கதையை இயக்குநர் சொல்லும்போது உற்சாகமடைந்தேன். இதில் வித்தியாசமான காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பெண்ணாக இருந்தாலும் மனதளவில் ஆணாக நடிக்கும் கேரக்டர். அதாவது யோகிபாபுவாக நடிக்கிறேன். இதில், மதுகுடிக்கும் காட்சியில் நடிப்பது கடினமாக இருந்தது. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக இருக்கும்.

சினிமாவில் 20 வருடத்தைத் தொட்டிருக்கிறேன். இந்த திரைப்பயணத்தில் அதிக பொறுமையை கற்றுள்ளேன். என் லட்சியங்களை அடைய கடுமையாக உழைப்பதையும் அறிந்திருக்கிறேன். அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

31 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். இப்போது அவர்கள் பெரியவர்களாகி விட்டார்கள். அவர்களுக்கான கல்வி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE