“சிறந்த படங்களை எடுத்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்” - ‘போர் தொழில்’ விழாவில் சரத்குமார் பேச்சு

By செய்திப்பிரிவு

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘போர் தொழில்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய இந்தப் படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜூன் 9ம் தேதி வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் படத்தை வெளியிட்ட சக்தி பிலிம்பேக்டரி சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் சரத்குமார் பேசியதாவது: இந்தப் படத்தின் கதையை சொன்னதில் இருந்து, இயக்கியது வரை இயக்குநர் விக்னேஷ் ராஜா சிறப்பாகச் செயல்பட்டார். இந்தப் படம் நான்கு வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் தொடர்ந்து ஓடும் என்றும் நம்புகிறேன். இந்தப் படம் இளைஞர்களை மட்டுமல்ல, வயதானவர்களையும் கவர்ந்திருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பணியாற்றிய அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தார்கள். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது. தியேட்டருக்கு யாரும் வரமாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். நல்ல படங்களை உண்மையுடன் எடுத்தால் கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். அதற்காக நல்ல கதைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சக்தி பிலிம்பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “இந்தப் படம் எதிர்பார்த்ததை விட 2 மடங்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE