“எத்தனை பேர் குறை சொன்னாலும்...” - ‘தேவர் மகன்’ குறித்து இயக்குநர் மோகன்.ஜி

By செய்திப்பிரிவு

“எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம்” என ‘தேவர் மகன்’ படத்தை இயக்குநர் மோகன்.ஜி புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஓர் ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்தத் திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் #தேவர்மகன்” என பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் “மனப்பிறழ்வை ஏற்படுத்திய படம்” என பேசிய கருத்துகள் இணைய வெளியில் விவாதத்தை கிளப்பின.

கமல் ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி வந்தனர். பின்னர் இது தொடர்பாக விளக்கமளித்த மாரிசெல்வராஜ், “அது மிகவும் எமோஷனலான ஒரு தருணமாக இருந்தது. கமல்ஹாசன் போன்ற ஓர் ஆளுமை படத்தைப் பார்த்து விட்டார். மேடையில் என் படத்தைப் பற்றி பேசப் போகிறார். அப்போது நான் எவ்வளவும் எமோஷனலாக இருந்தேன் என்று அவருக்குத் தெரியும். 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் என்பது அன்றைக்கு இருந்த கோபம், மொழி ஆகியவற்றால் எழுதப்பட்டது. அப்போது எனக்கு வாசிப்புப் பழக்கம் எல்லாம் கிடையாது.

தமிழ் சினிமாவிலேயே ‘மாமன்னன்’ படத்தைப் பார்த்த ஒரே ஆள் கமல்ஹாசன் மட்டும்தான். அந்தப் படத்தை அவருடன் பார்க்கும்போது நான் எவ்வளவும் எமோஷனலாக இருந்தேன் என்பது எனக்கும் அவருக்கும் மட்டும்தான் தெரியும். என் படத்தைப் பார்த்துவிட்டு என்னை அவர் அங்கீகரித்துவிட்டார், என் கையைப் பிடித்து என்னைப் பாராட்டினார் என்பது என் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை. என் முன்னால் அவர் அமர்ந்திருக்கும்போது, இத்தனை நாட்களாக எனக்குள் இருந்த விஷயத்தை அன்று பேசவில்லையென்றால் வேறு என்றைக்கு பேசுவது. நான் பேசும்போதே தெரியும். எங்கேயோ தொடங்கி எங்கேயோ போயிருப்பேன்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE